Skip to content
May 22, 2022
  • Facebook
  • Youtube
  • Twitter
  • Instagram

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்

Vishnupuram Ilakkiya Vattam

Primary Menu
  • முகப்பு
  • அறிமுகம்
  • விருதுகள்
    • விஷ்ணுபுரம் விருது
    • குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது
  • இலக்கிய கூடுகைகள்
    • குரு நித்யா முகாம்கள்
    • படைப்பாளுமை அரங்குகள்
    • கலந்துரையாடல்கள்
    • பிற அரங்குகள்-நிகழ்வுகள்
    • பயிற்சி பட்டறை
  • தொடர்புக்கு: solputhithu@gmail.com
நேரலை நிகழ்வு
  • 2017-06: குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2017 – சபரிநாதன்

சபரியின் ‘வால்’ -தூயன்

தாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதைகளை மொழிபெயர்த்ததன் (உறைநிலைக்கு கீழே) வழியாகத்தான் சபரிநாதன் என்கிற பெயர் பரிச்சயம். அதன் பிறகு வால் தொகுப்பு வாசித்ததும் அவரின் முந்தைய தொகுப்பான களம் காலம் ஆட்டம் தேடி வாசித்தேன். இடையே ஜெயமோகன் தளத்தில் தேவதச்சம் கட்டுரை மற்றும் தேவதச்சன் பற்றிய உரை. சமீபத்தில் இடைவெளி இதழில் வெளிவந்த பிரவீண் பஃறுளி எடுத்த நேர்காணல். ஆக சபரிநாதனுடன் எந்தவித உரையாடலையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் எழுத்துகள் மூலகமாகத்தான் அவரைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது. இரண்டாயிரத்தின் தொடக்கம் […]

admin June 10, 2017

2 (2)

தாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதைகளை மொழிபெயர்த்ததன் (உறைநிலைக்கு கீழே) வழியாகத்தான் சபரிநாதன் என்கிற பெயர் பரிச்சயம். அதன் பிறகு வால் தொகுப்பு வாசித்ததும் அவரின் முந்தைய தொகுப்பான களம் காலம் ஆட்டம் தேடி வாசித்தேன். இடையே ஜெயமோகன் தளத்தில் தேவதச்சம் கட்டுரை மற்றும் தேவதச்சன் பற்றிய உரை. சமீபத்தில் இடைவெளி இதழில் வெளிவந்த பிரவீண் பஃறுளி எடுத்த நேர்காணல். ஆக சபரிநாதனுடன் எந்தவித உரையாடலையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் எழுத்துகள் மூலகமாகத்தான் அவரைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது.

இரண்டாயிரத்தின் தொடக்கம் தமிழ் இலக்கியச் சூழலில் புதிய வாசல்களை அமைத்துக்கொண்டது எனலாம். நவீன கவிதையின் அகம் தன்னளவில் ஆழப்படுத்தியும் விரிந்தும் உருமாறியது இப்போதுதான். படைப்பூக்கம் பற்றிய சுயமதிப்பீடுகள் தோன்றியதும் வாசிப்பு, விமர்சன வெளியில் இணையத்தின் பங்கெடுப்புகளும் அதை நோக்கிய விவாதங்களும் பாசீலனைகள் என ஒரு மறுமலர்ச்சிக்கான சாத்தியங்கள் ஏற்பட்டன. பிந்தைய காலனியத்துவத்தும் பொருளீயல் நுகர்வு கலாசாரம் உலகமயமாக்கல், பொருளாதாரம் மற்றும் தாரளமயமாக்கல்; சார்ந்த மதிப்பீடுகள் என சமூகம் அதன் வரலாற்றின் அதன் ஒட்டுமொத்த அவநம்பிக்கைகளையும் ஏற்றுக்கொண்டும் விலகியும் இருக்க வேண்டியதாகியது. இச்சூழலில் தான் இணையத்தளமும் தொழில்நுட்பங்களும் ஒரு காலனிய மனோபாவத்துடன் நம்மை ஆக்கிரமிக்கின்றன. கிட்டத்தட்ட சுவாதீனமற்ற இருப்பு. இலங்கையின் போருக்கு பிந்தை வாழ்வின் அவலங்களையும் நிதர்சனங்களையும் குறித்த இலக்கியங்கள் தவிர்த்து தொண்ணூறுகளுக்கு முந்தைய வாழ்வில் பிரதிபலித்த அதிகாரத்தின் மீதான ஆவேசங்களோ நுகர்ச்சந்தைகளின் மீதான வெறுப்புகளோ அரசியலுக்கு எதிரான அவநம்பிக்கைகள் மாக்ஸியப் பார்வை சார்ந்த மதிப்பீடுகள் என இருப்பின் சகலமும் பாதிக்கின்ற படைப்புகள் இப்போது எழவில்லை. மாறாக குதூகலமனோபாவம், ஊடகங்கச் சுதந்திரம், பகடித்தனம் என முற்றிலும் நவீனத்துவத்தை சுதந்திரமாக சிருஷ்டித்துக் ஒருவித ‘இறுக்கமற்ற மனமே’ எடுத்துக்கொண்டது. .

இத்தகையச் சூழலில் தான் சபரிநாதன் போன்றவர்கள் எழுத் தொடங்குகிறார்கள். எண்பதுகளின் இறுதியில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு இரண்டாயிரத்தின் தொடக்கம் ஒருவகையில் குதுகலத்தையும் மனக்கிளர்ச்சிகளையும் ஆசைகளையும் கொடுத்ததெனச் சொல்லலாம். தொழில்நுட்பமும் இணையமும் ஹாலிவுட் படங்களில் வரும் இராட்சஸ வெளவால்களாக ஏகாந்தங்களின் கூரைகளைப் பிடித்து தொங்கவராம்பித்தன. பனையோலைக் குடிசைகளிலும் அலுமினியக் காளான்கள் மொட்டை வெயிலில் மினுங்கிக் கொண்டிருந்தன. கழுதைகள் காணாமல் போனதும் பன்றிகள் இனப்பெருக்கம் குறைந்ததும் குரங்குள் மரம் ஏற மறந்ததும் இந்த இரண்டாயிரத்தில் தான். கல்லூரி முடிந்து நான் பார்க்கும் கிராமம் கிட்டத்தட்ட முற்றாக தன்னை அழித்துக்கொண்டு வேறொன்றாக உருமாற்றிக்கொண்டு நின்றது. பிள்ளை பிராயத்து பொழுதுகள் விழுங்கப்பட்டு அங்கு வெற்று சூன்யமே நிரம்பியிருந்தது. இழந்துவிட்ட தொண்ணூறுகளின் வாழ்வைத் தேடி மனம் சஞ்சலம் கொள்கிறது. இத்தகைய சஞ்சலத்தைப் பிரதிபலிக்கு ‘நடுகல், ‘இது வெளியேறும் வழி அன்று போன்ற கவிதைகளில் என்னால் கண்டுணர முடிந்தது.

‘இது வெளியேறும் வழி அன்று கவிதையில் கேஸ் 1,2,3,4 என ஒவ்வொரு சாட்சியாகச் சொல்லிக்கொண்டே வருகிறார். அதன் முடிவில் இப்படியொரு வரி எழுகிறது. ‘எல்லாவற்றுக்கும் சாட்சியாக நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்?’ இது கவிதைசொல்லியின் ஆழ் மனச் சிக்கல்களில் எழுகின்ற வினா. குற்றவுணர்வின் மனப்பிம்பம் என்றே சொல்ல முடிகிறது. இது போன்று கவிதைகளுக்குள் எழும் குற்றவுணர்வும் கேள்விகளும் தர்க்கத்தோடு அக்கவிதை சொல்லியைத் துரத்திக் கொண்டே வருகின்றது.

‘1. 12. 12 என்றதொரு கவிதையின் கடும் குளிர்காலத்தைக் குறிப்புணர்த்திவிட்டு தன் பிறந்த ஊரின் வெப்பத்தை எண்ணிக்கொண்டிருக்கும் கவிஞனை ஆழ்ந்து வாசிக்கையில் மட்டுமே உணர முடியும். ஸ்தூலவுடலில் எஞ்சியிருக்கும் வெப்பத்தை நினைவுகளில் பத்திரப்படுத்தும் மனம் அங்கு காட்டப்படுகிறது.

நோபல் விருதுக்கான உரையில் நெரூதா இப்படிச் சொல்கிறார். ‘சாதாரண மக்களுடன் தவிர்க்க முடியாத வகையில் கொள்ளும் தொடர்புகளால் மட்டுமே, ஒவ்வொரு காலத்திலும் சிறிதுசிறிதாகக் கவிதை இழந்துவரும் மகத்துவத்தைத் திருப்பியளிக்க்க முடியும். ’ கவிதைகளில் வரலாற்றில் அதிகமும் சாதாரண மக்களின் நுண் அசைவுகளால் நிரப்பியதெனச் சொல்ல முடியும். ஏனெனில் இங்கு சாதாரண மக்களின் எளிய ஒரு செயல்பாடுகூட அழகிலாகச் சொல்லப்பட்டது. காரணம் அவர்கள்தான் நூற்றாண்டுகள் தோறும் குற்றச்சாட்டுகளை சுமந்தலைபவர்கள். காலானி மனோபாவத்திற்கு ஆட்படுகிறவர்கள். சபரியின் பல கவிதைகள் அன்றாட வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் சிறு சினுங்கல்களும் பொறுப்புகளும் அதனூடே எழும் சிரமங்களையும் சித்திரங்களாக்குகின்றன. இது தேவதச்சனின் அன்றாட வாழ்விலிருந்து சற்று வெளிவட்டத்தில் இயங்குகிறது எனலாம். தேவதச்சன் தன் அன்றாட நிகழ்வுகளை சித்தரிக்கும் பிரக்ஞை அல்ல சபரியினது. சமயங்களில் தேவதச்சனிடமிருந்து விலகி அதை அங்கதமாகவும் காட்டுகிறார். வீட்டுக்காரர் கவிதையில வரும் குடும்பஸ்தர்ää மூன்று குரங்குகள் கவிதை- ஏழைத் தந்தை, நாற்பது வயதைத் தாண்டிய தட்டச்சர் என அக்கதாப்பாத்திரங்களை காணலாம்.

சபரியின் கவிதைகளில் சுகுமாரனின் ‘பற்றி எரிவதையோ’, வெய்யிலின் கோபத்தையோ காட்டுவதில்லை மாறாக மெல்லிய தொனியை மட்டுமே கொண்டுள்ளது. அதே சமயம் மொழிபெயர்ப்புக்கான லயத்;தின் தோற்ற மயக்குமும் அத்தொனிக்கு உண்டு. இத்தகைய லயம் அக்கவிதைக்குள் அந்நியத்தன்மை உருவாக்கிவிடுகிறது. கீழிறங்கும் படிகள் கவிதையை உதாரணப்படுத்தலாம். புறவயமாக அக்கவிதை ஒரு மலையுச்சியின் பாதைகளையே கற்பனைப் படுத்துகிறது. மாறாக சொல் உத்தியில் வெளிப்படும் அந்நியப் பரப்புத் தன்மை, புறவுலகக் காட்சியை பார்க்கும் மோனநிலை என அக்கவிதையை நெருக்கமாக உணரத் தடை செய்துவிடுகிறது. இது போன்ற மொழிபெயர்ப்பு லயம் சபரியின் கவிதைகள் சிலவற்றில் சித்தரிப்புகளில் வழிய நுழைந்துகொள்கிறது.

சபரியின் கவிதைகளில் காமம்:

குறுந்தொகைக்கு நிகராக காமத்தை நான் அதிகம் ரசித்து வாசித்தது சங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகளில் மட்டுமே.

எனக்கு
நானே
அளிக்கும்
விருந்து
நாய் பெற்ற
தேங்கம்பழம்
எனது காமம்

என்கிற கவிதை மறுபடியும் மறுபடியும் எழுந்து அழியாச் சித்திரமாகவே என்னுள் உருவாகிவிட்டது.

கவிதை பற்றிய கட்டுரைகள் நூலில் ஆனந்த் இப்படி எழுதியிருப்பார்: ‘வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு மனநிலைகளில்,வெவ்வேறு அகச் சூழலில் ஒரே கவிதை ஒரே வாசகனிடத்தில் வெவ்வேறு அகநிலைகளைத் தோற்றிவிக்க முடியும்’’ இதே போன்று சபரியின் மின்மினயே கவிதை உணர்ந்தேன். முதல் முறை தொகுப்பை வாசிக்கையில் எளிதில் கடந்து விட்டேனா அல்லது அதை வெறும் அழிகியல் காட்சியாக எண்ணிக்கொண்டேனாவெனத் தெரியவில்லை. பின் அந்திப் பொழுதில் மழை ஓய்ந்த தருணத்தில் சட்டென அக்கவிதை எனக்கு காமத்தை நினைவூட்டியது. சிறுவயதில் மின்மினியைக் கண்டு ஆர்பரித்திருக்கிறேன் பின்னாலில் வியந்திருக்கிறேன் இப்போதும் அது எனை இருளிலிருந்து தீண்டும் காமமாக இருந்து கொண்டிருக்கிறது. மின்மினி பேன்டஸியான கிரியேச்சர். பல்லூயிரியாளர்கள் அதைப் பற்றி ஆராய்ந்து சலித்திருக்கிறார்கள். மனித மனம் எப்போதுமே பறப்பதற்கு ஆசைக் கொண்டது. மின்மினி பறந்து கொண்டே சுடரும் ஓர் உயிர். அதிலும் இருளில் டார்ச்சைக் கட்டிக்கொண்டு பறப்பதே அச்சிறு பூச்சியின் மீதிருக்கும் பற்றுதலை அதிகமாக்குகிறது. கிட்டத்தட்ட எல்லா கவிஞர்களும் மின்மினியைத் தொட்டுவிட்டிருக்கிறார்கள். இக்கவிதை வரிகளை மனிதனின் தேடலாகப் பார்க்கலாம் ஆனால் இதை காமத்தினுள் தளும்பும் முற்றாத மனத்துடன் ஒப்பிடுகிறேன். ‘யார் தொட்டு எழுப்பியது உனை, எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்’ என்னும் வரிகள் என் ஆழ்மனதைப் பார்த்து ஒரு கணம் வெட்கப்புன்னகை செய்கின்றன. ஆமாம் காhமம் விழித்துக்கொள்ளும் கணம் அது. அதற்கு முன்பு வரை காமம் ஊமையாய், குருடனாய்,ä முடவனாய் தான் தன் ஊனவுடலுடன் கிடந்திருக்கிறது. அது முளைவிடும் கணம் மறுபடியும் மறுபடியும் வாசிக்கையில் என்னால் உணர முடிகிறது.

மின்மினியே…
யார் தொட்டு எழுப்பியது உனை
எந்தக் கரம் உணக்கு பார்வை தந்தது
எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்
கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்
பித் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்.

சங்கர்ராமசுப்ரமணியனின் காட்டும் காண்பரப்பை சபரியிலும் உணர முடியும். ’அத்திசை
அக்காளும் தங்கையும் வருகிறார்கள் மச்சுக்கு
எங்கள் பக்கம் அவர்கள் குட்டிப்பிசாசுகள் என அழைக்கப்படுகின்றனர்
அக்கா எதையோ கை காட்டுகிறாhள் தங்கை திரும்புகிறாள் அந்தப்பக்கம்
எவ்வளவோ முடியுமோ அவ்வளவு நீட்டிச் சுட்டுகிறாள் மூத்தவள்
நுனிகாலில் எம்பி எம்பி அங்கிங்கசைந்து காணத் துடிக்கிறாள் சின்னவள்
மரகதவெயில், பசுந்பொழில்நீலமோனம்ம்
ஒத்திசைந்த நற்கணம் இருவரும் சேர்ந்து கைநீட்டிச் சிரிக்கிறார்கள்.
அறையில் இருந்து வெளிவந்தவன் பார்க்கிறான்.
அத்திசையில்
சிரிப்பதற்கு எதுவுமில்லை அவனுக்கு.
இந்த கவிதையில் காட்டப்படும் காண்பரப்பானது அழிகிய கோட்டோவியம் போன்றது. அவ்வளவு நீட்டிச் சுட்டுகிறாள் மூத்தவள்,ä நுனிகாலில் எம்பி எம்பி அங்கிங்கசைந்து காணத் துடிக்கிறாள் சின்னவள் என்கிற வரிகள் தங்கள் இருப்பிலிருந்து விடுபடுவோ அல்லது அழகியலின் விளிம்பைத் தொட்டுவிடவோ துடிக்கும் பெண்பிள்ளைகளின் சித்திரத்தை கற்பனையில் கூட்டுகிறது. அங்கு அவர்கள் காண்பதைத் தவிர வேறொன்றுமில்லை மற்றவர்களுக்கு. அது கணநேரச் சந்திப்பு மட்டுமே.
பொதுவாக நம்மில் பலருக்கு நவீனக் கவிதைகள் புரிபடாதவைகளாக இருப்பதற்கு காரணம் உரைநடைகளை வாசிப்பது போலவே கவிதைகளையும் எடுத்துக்கொள்வது. கவிதைக்கான மனநிலை என்பது அது தன்னளவில் உருமாறிக்கொள்வதே. கவிதைக் குறித்த ஆனந்தின் வரிகளை இங்கு நினைவுபடுத்தலாம்
வால் தொகுப்பிலிருக்கும் பல கவிதைகளில் ஓர் இளைஞனின் உருவத்தை என்னால் கற்பனை செய்துகொள்ள முடிந்தது. அவன் மிகவும் தனிமை விரும்பி, சோம்பலை கொண்டாடுபவன், தன்னைச் சுற்;றி உருளும் சருகைக்கூட உற்று நோக்குபவன். தன் பசிக்கான தேடுதலிலும் பொறுமையைக் கடைபிடிப்பவன், பெரும் இரைச்சலுக்கு செவிகளை இறுகப்பொத்திக்கொள்பவன், அழுத்தங்களை மீன் தொட்டி உடைப்பது போல தூர எடுத்துச் சென்று எரிய வேண்டுமென நினைப்பவன்(இது ஒருவிதமான குரூர அமைதியும் கூட) தட்டச்சருக்கு நேர்ந்தவை, தனிச்சாமரம்,ä ஹாரன், நிழலுள்ளிருந்து, பிரம்மச்சாரியின் சமையலறை போன்ற கவிதைகளில் அந்த இளைஞனை நினைவு கூர்கிறேன். கிட்டத்தட்ட சபரியின் ஏனையக் கவிதைகளிலும் இவனே கவிதைசொல்லியாகவும் சமயங்களில காணும் காட்சியாகவும் வருகிறான். ஆனால் அதே இளைஞன் சில இடங்களில் சுய எள்ளலுக்குள்ளாக்கப்படும் சுதந்திரத்தையும் கொண்டிருக்கிறான். ‘மறதி’ கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
காற்றில்லாத போதில் பூ மரம் என்றொரு கவிதை நீர் தளும்பலின் தனிமையைப் போல அழகான ஒன்று. எனக்கு எப்போதோ வாசித்த ஸ்ரீநேசனின் இலைச் சருகு கவிதையை நினைவுக்கு வந்தது.
ஓடைக்கரையில் கர்ப்பிணி காத்திருக்கிறாள்
எண்ணெய் பிசுபிசுக்கும் பவுடர் பூசிய முகத்தோடு
அவள் அம்மைக்காகவோ
வீட்டுக்காரருக்காகவோ. சுடுகுஞ்சியிலலாத பாதையில்
நிறைவயிற்றைத் தடவுகிறாள்
தன் குழந்தைக்காகத் காத்திருக்கிறாளோ என்னவோ
அதை விடத் துயரமானது
காற்றில்லாத இப்போதில்
பூத்துத் தளும்பும் நாட்டுவாகை மரம்
யாராவது அவளிடம் சொல்லுங்களேன்
கொஞ்சம் (கொஞ்சம்தான்) உன்னி அந்தத் தாழ்கொப்பை உலுக்குமாறு
யாரவாது சொல்லுங்களேன்
நான் அந்தக் குழந்தையிடம் சொல்வேன்
எத்தனை துடிக்கும் மஞ்சள் மலர்களுக்குக் கீழே அது பிறந்தது என்று

தன்னுணர்வையும் காணுதலையும் இணைக்கும் திரையாக இக்கவிதையில் நிகழ்வதை அறியமுடிகிறது. கர்ப்பிணி பெண்ணொருத்தியின் தனிமையை கவிதைசொல்லி காட்டுகிறார். அவள் எதற்கு நிற்கிறாளென்பது தெரியாது. ‘அதைவிடத் துயரமானது’ என்றொரு வரியில் அவளைப் போன்றே நிற்கும் பூத்துக் குலுங்கி ஈன்றுவிட்டிருக்கும் வாகையின் தனிமையைத் துணைக்கழைக்கிறார். அடுத்தவரியில் ‘அந்தத் தாழ்கொப்பை உலுக்குமாறு யாராவது சொல்லுங்களேன்’ என்கிறார். அப்போது அவர்கள் இருவருக்குமான(மரம், அவள்) அக்கணச்சூன்யத்தை களைக்க எத்தனிக்கும் கவிதைசொல்லியின் பிரக்ஞையைக் காட்டுகின்றன. கவிதை முடிக்கும் போது ‘நான் அந்தக் குழந்தையிடம் சொல்வேன் எத்தனை துடிக்கும் மஞ்சள் மலர்களுக்குக் கீழே அது பிறந்தது’ என்கிற வரிகள் பிரக்ஞை மனம் முழுமுற்றாக தன்னை நனவிலியிலிருந்து பிரித்துக்கொண்டு கவிதைசொல்லியின் யதார்த்தவுலகிற்குள் நுழைந்துவிடுகிறது. ஆனால் வாசகனின் பிரக்ஞைக்ப்பால் கடைசி வரிகளுக்கு முந்தைய கணமே எஞ்சி விடுகிறது.

Narrative poems எனச் சொல்லப்படும் சித்தரிப்பு பாணி கவிதைள் இன்று அதிகம் எழுதப்படுகின்றன. கிட்டத்தட்ட கதை போலவே. மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பெருப்பாலும் அப்படி கதை போல பிரக்ஞையில் எழுதப்படுபவை. சபரியும் இத்தகையப் பாணிக் கவிதைகளை எழுதியிருக்கிறார். அதில் சிலவற்றை சிறு குறிப்புகளோடு முன்வரைவு படுத்தி புதிய பரீட்சார்த்தத்தை செய்கிறார். ஜம்போ சர்க்கஸ், மீசைக்காரர், சூப் ஸ்டால் போன்ற கவிதைகளில் முதலில் சித்திரமொன்றை எழுப்பிவிட்டு பின் கவிதைசொல்லியின் குரல் எழும்.

சமீபத்தில் இரயில் பயணம் செய்கையில் இடம் கிடைக்காமல் லக்கேஜ் கேரியரில் ஏறி அமர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அங்கு ஏழு எட்டு வயதுள்ள இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். இரயிலை நிறுத்துவதோ அல்லது மேற்கூரையை தலையால் முட்டி உடைக்கவோ திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள். கீழே பெரியவர்களைப் பார்த்து கூச்சலிட்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள். என்னிடமிருந்து தொடுதிரை செல்போனைக் கண்டதும் ‘கேம் இருக்கா’ என்றான் மிரட்டும் தோனியில் ஒருவன். கீழே விழுவது போல பாவனை செய்து எனை பதறச் செய்து விளையாண்டார்கள். அவர்களுக்கு இரயில் புறவையமாகப் பார்ப்பதுபோலவே அப்போதும் விளையாட்டு பொருளாகத்தான் இருந்தது. அதன் மீது பெரும் ஆச்சர்யமமெல்லாம் இல்லை. எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு தெரியாததுபோல பாவனைக் காட்டி ஒருவன் அமர்ந்திருந்தான். அதுபோன்ற ஒரு சிறுவன் சபரிநாதனின் பெரும்பாலான கவிதைகளில் வருகிறான். இச்சமூகத்தை நோக்கி குசும்பாகப் பரிகசிக்கும் அவனுக்கு இந்த வாழ்வின் அர்த்தங்கங்களும் அர்த்தமின்மையும் நன்றாகவே தெரியும் ஆனாலும் அதை கிள்ளிவிட்டு தூர நின்று சிரிக்க வேண்டுமென்கிற உணர்வு உண்டு. (அப்படி தூர நின்று தான் அதை சிரிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்)

சபரியின் கவிதைகளில் வரும் சிறுவன் குடும்ப உறுவுகளில் நடக்கும் விநோதங்களிலும் பங்கெடுப்பவன். தங்கை பிடித்த முயல் கவிதையில் புதுமாப்பிளையின் தோளைத் தட்டிக்கொடுத்து நகர்கிறான்.

சபரியின் கவிதையில் பெண் பாத்திரங்கள் :

சபரியின் பெண் பாத்திரங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். மத்யமர்கள். சமூகத்தை நோக்கி குரல் உயர்த்த சலித்துக்கொள்பவர்கள். வாழ்வின் ளயகந ளனைந ல் இருப்பவர்கள். மத்யமர்களுக்கே உரிய பாவனையான குடும்பத் தலைவனையும் சகோதரர்களையும் சக ஊழியர்களை மட்டுமே குற்றம் சொல்பவர்கள். அங்கு முலையை விலக்கிக் காட்டியழைக்கும் வேசிளோ, பிள்ளைக்கும் பசியை பங்கிடும் பஸ்ஸ்டாண்டு வாசிகளோ, கடை வேலை முடித்து பேருந்து விரையும் இளைஞிகளோ தோன்றுவது இல்லை. ‘ஓர் இந்திய விளம்பரக் குடும்பம்- மத்யமர்களைப் பற்றி சித்தரப்பு பாணியிலான அபாரமான ஒன்று. தமிழில் மத்யமர்களை இவ்வளவு அங்கதத்துடன் எழுதியவர்கள் மிகச் சிலரே. இக்கவிதையின் தலைப்பே அங்கதத்துடன் தொடங்கும்.

‘மனம் கட்டவிழும்போது, சுயம் விடுதலையையும் நேரடியான சுய அனுபவத்தையும் அடைகிறது. மகிழ்ச்சி கொள்கிறது. மனம் பலதளங்களைக்கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் பல நிலைகளை மேற்கொள்ள வல்லது. ஒரு குறிப்பிட்ட கவிதை எந்தத் தளததில் எந்த நிலையை மேற்கொள்கிறதோ அதே தளத்தில் அதே நிலையை வாகனின் மனமும் சுயேச்சையாக மேற்கொள்கிறது. ’ இதை மனம் கட்டவிழ்தள் என்கிறார்; ஆனந்து. ஆழ்மனம் கட்டவிழ்ந்தலில் எழுதப்படும் கவிதையை மேல் மனத்தால் எப்போதுமே உணர முடியாது. கவிதைகள் குறித்து நாம் உரையாடுவதற்கு காரணமும் இந்த ஆழ்மனத் தளத்தை சென்று தொடுவதற்குத்தான். என்னளவில் கவிதைக்குறித்த நிறைய உரையாடல்கள் அமைத்துக்கொள்வதுதான் அதனை புரிந்துகொள்ள வழிகளில் ஏற்படுத்திக்கொடுக்கும். நண்பர் துரைக்குமரனுடன் வால் குறித்த நிறைய உரையாடல்களை நான் ஏற்படுத்திக்கொண்டேன். இங்கு அத்தகைய உரையாடல்கள் அரிதாகவே அமைந்துவிட்டுள்ளது.

முதல் தொகுப்பில் பல கவிதைகளிலிருந்த தவிப்பும், நிராதரவும், கைவிடப்படுவதும், முதிரா மனமும் கொண்ட கவிதைசொல்லியின் குரல் ஊடுபாவியிருப்பது வால் தொகுப்பில் இல்லை. முற்றிலும் மேம்பட்ட மனோபாவம். ‘இது இப்படித்தான் நடக்கிறது’ என்கிற திடத்துடன், சாவகாசமாக எதிர்கொள்கிற உணர்வு, கோபமற்ற குரல் கிட்டத்தட்ட முதிர்ந்ததொருச் சித்திரத்தை நம்மால் காண முடியும். சமயங்களில் மேட்டிமைத்தனத்துடனும். அடுத்தத் தொகுப்பு இதற்கு எதிரானதாகவும் அமையலாம்.

விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது பெறும் சபரிநாதனுக்கு வாழ்த்துக்கள்

தூயன்
(சித்தனவாசல் இலக்கியச் சந்திப்புக்காக எழுதப்பட்டு வாசிக்கப்படாத கட்டுரையின் முழுமை)

Continue Reading

Previous: சபரிநாதன் நேர்காணல்
Next: மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்

வரவிருக்கும் நிகழ்வுகள்

இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்
  • 010 வரவிருக்கும் நிகழ்வுகள்

இன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்

admin December 25, 2021
சந்திப்புகள் விழாக்கள் விழா ஒரு கோரிக்கை விஷ்ணுபுரம், அரங்கு முறைமையும் நெறிகளும் இன்று, 25-12-2021 அன்று விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா கோவை...
மேலும் படிக்க...
விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
  • 010 வரவிருக்கும் நிகழ்வுகள்

விஷ்ணுபுரம் விருது விழா, வருக!

admin December 7, 2021
விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கோவையில் நிகழவிருக்கிறது. முதல்நாள் வழக்கம்போல எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள். கோகுல்பிரசாத்,...
மேலும் படிக்க...
2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன்
  • 003 Event cover post
  • 010 வரவிருக்கும் நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • விஷ்ணுபுரம் விருது-விழா

2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன்

admin November 5, 2021
மேலும் படிக்க...

அண்மைய நிகழ்வுகள்

2021-10: புவியரசு 90 – விழா
  • 003 Event cover post
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • படைப்பாளுமை ஆய்வரங்கு-விழா

2021-10: புவியரசு 90 – விழா

admin October 24, 2021
மேலும் படிக்க...
2021-10: வெண்முரசு – இசை வெளியீட்டு விழா
  • 003 Event cover post
  • 008 வெண்முரசு தொடர்பானவை
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • பிற ஆய்வரங்கு/நிகழ்வு

2021-10: வெண்முரசு – இசை வெளியீட்டு விழா

admin October 9, 2021
மேலும் படிக்க...
2021-10: கவிதை அரங்கு (கோவை)
  • 003 Event cover post
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • பிற ஆய்வரங்கு/நிகழ்வு

2021-10: கவிதை அரங்கு (கோவை)

admin October 3, 2021
மேலும் படிக்க...
2021-07: வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021
  • 003 Event cover post
  • 008 வெண்முரசு தொடர்பானவை
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • கலந்துரையாடல்

2021-07: வெண்முரசு நாள் – குருபூர்ணிமா 2021

admin July 23, 2021
மேலும் படிக்க...
2021-06: குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார்
  • 003 Event cover post
  • 009 அண்மைய நிகழ்வுகள்
  • 2021 நிகழ்வுகள்
  • குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது-விழா

2021-06: குமரகுருபரன்-விஷ்ணுபுரம் விருது 2021 – மதார்

admin June 30, 2021
மேலும் படிக்க...
  • Facebook
  • Youtube
  • Twitter
  • Instagram
தொடர்புக்கு: solputhithu@gmail.com | Copyright விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் © All rights reserved. | MoreNews by AF themes.